பணக்கார தந்தையின் பணப்புழக்க கட்டம் - புத்தக சுறுக்கம்.
பணப்புழக்க கட்டத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன. நமது வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை பொறுத்து நாம் எந்த கட்டத்தில் உள்ளோம் என்பதை அறியலாம். சிலருக்கு பல கட்டங்களில் இருந்தும் வருமானம் வரலாம். ஒவ்வொரு கட்டத்திற்கும் தனித்தனி மனநிலை, வெவ்வேறு திறன்கள், வெவ்வேறு படிப்புகள் தேவைப்படும். அந்த நான்கு கட்டங்களிலும் பணக்காரராக முடியும். ஆனால் சில கட்டங்களில் வேகமாக பணம் சம்பாதிக்க முடியும். அந்த கட்டங்களை பார்க்கலாம் வாங்க.
இவையே அந்த நான்கு பணப்புழக்க கட்டங்கள். இடப்பக்கம் மேலே Employee அதாவது ஊழியர். இடப்பக்கம் கீழே Self employed அதாவது சுயதொழில் அல்லது சிறிய தொழில் புரிவோர் அல்லது Professional. வலப்பக்கம் மேலே பெரிய தொழில் செய்வோர். வலப்பக்கம் கீழே முதலீட்டாளர்.
முதலில் ஊழியரைப் பார்க்கலாம் வாங்க. நம் சிறுவயது முதலே நமக்கு சொல்லி தந்தது நன்றாக படி, நல்ல பாதுகாப்பான வேலைக்கு போ, நல்ல சம்பளம் கிடைக்கும், கூடவே பல சலுகைகள். இங்கு பாதுகாப்பின்மை பயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் பணத்தை விட பாதுகாப்பே முக்கியமாக கருதுகின்றனர். கார்ப்பரேட் ஏணியில் ஏறித்தான் இவர்கள் பணக்காரன் ஆக முடியும். உதாரணமாக சுந்தர் பிச்சை. ஆனால் பணக்காரன் ஆவதற்கு இது மிகவம் கடினமான வழி.
இரண்டாவது கட்டம் சிறு தொழில் புரிவோர். இவர்களுக்கு இவர்களே முதலாளி. தானே செய்யும் எண்ணம் உடையவர்கள். அவர்கள் துறையில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். உதாரணமாக மருத்துவர்கள், வக்கீல்கள். இவர்களுக்கு பணி சுதந்திரம், மரியாதை ஆகியவை பணத்தை விட முக்கியம்.
மூன்றாவது கட்டம் பெரிய தொழிலதிபர்கள். நமக்காக நம்மைவிட நன்றாக செய்ய பலர் இருக்கும் போது எதற்காக நாமே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்களுக்கு தலலைமைத்துவ பண்பு மிகவும் அவசியம். அவர்கள் ஒர் அமைப்பை அவர்களுக்கு உழைப்பதற்காக உருவாக்கி இருப்பார்கள். பிறரிடமிருந்து சிறந்த வேலை வாங்குவதில் வல்லவர்கள். சிறுதொழில் புரிவோர்கள் தங்கள் தொழிலில் தினமும் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் பணவரவு நின்று விடும். பெரிய தொழில் அதிபர்கள் தங்களுக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கி இருப்பதால் அவர்கள் இல்லாமலே தொழில் நடைபெறும். வித்தியாசம் என்னவென்றால் சிறு தொழில் புரிவோர் ஒரு வேலையை சொந்தமாக கொண்டுள்ளனர். தொழிலதிபர்கள் தரமான பணியாளர்களை நியமித்து ஒரு அமைப்பை உருவாக்கி நடத்துகிறார்கள். பெரிய தொழில்முனைவோருக்கு தலைமைப் பண்பும் ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். வெறு சிலருக்கே அத்தகைய சிறந்த கட்டமைப்பை உருவாக்கத் தெரியும். நம்மில் பலர் பல ஹோட்டல்களில் செய்வதைவிட நம் வீட்டு உணவு எவ்வளவு சுவையானது என நினைத்திருப்போம். ஆனால் ஏன் நம் எல்லோராலும் ஹோட்டல் கட்டி சிறந்த உணவளித்து பணக்காரன் ஆக முடியவில்லை. காரணம் நம்மால் ஒரு சிறந்த வணிக மாதிரியை உருவாக்க முடியாததால்தான். சிறந்த வியாபார உத்தியை உருவாக்க வேறுவகையான திறமைகள் தேவை.
நான்காவது கட்டம் முதலீட்டாளர். இவர்கள் நேரடியாக வணிகத்தில் நேரடியாக ஈடுபடாமல் தொழில்களில் முதலீடு செய்கின்றனர். அவர்கள் வேலை செய்வதில்லை. அவர்களின் பணத்தை அவர்களுக்காக வேலை செய்ய வைக்கின்றனர். பலரும் நினைப்பது போல் இவர்கள் முதலீட்டை சூதாட்டமாக பார்ப்பதில்லை. முதலீட்டை ஒரு கற்கக்கூடிய திறனாக பார்க்கிறார்கள். முதலீட்டு ரிஸ்க்கை கண்டு அஞ்சுவதில்லை. மாறாக ரிஸ்க்கை நிர்வகிப்பது எப்படி என்று கற்றுக்கொள்கிறார்கள். இங்கும் பணவரவு இவர்கள் நேரத்தை பொருத்தது அல்ல. இவர்கள் வேலை செய்யவிடினும் பணவரவு தொடர்ந்து வரும். இதற்கு பெயர் செயலற்ற வருமானம் (Passive income). அதாவது செயல் வருமானம் (Active income) நம் வருமானம் நாம் உழைக்கும் நேரத்திற்கு ஏற்ப வளரும். ஆனால் செயலற்ற வருமானத்தில் மற்றவருடைய நேரம், பணம் மற்றும் நம்முடைய பணத்தை உழைக்க வைப்பதால் வருமானம் நம் நேரத்தை நம்பியிராமல் அதிவேகமாக வளர்கிறது.
நான்கு கட்டங்களையும் பார்த்தோம். ஊழியருக்கு ஒரு வேலை இருக்கிறது. சிறு தொழில் புரிவோர் தனக்கே வேலை செய்கிறார். இவர்கள் இருவரின் வருமானமும் அந்த வேலையில் ஈடுபடும் நேரத்தை பொறுத்தது. அதிக வருமானம் பெற அதிக நேரம் உழைக்க வேண்டும். இவர்களுக்கு நிதி சுதந்திரத்தை விட நிதி பாதுகாப்பே முக்கியம். அதையே பள்ளி கல்லூரிகளிலும் சொல்லித்தருகின்றனர். நன்றாக படித்து நல்ல வேலைக்கு போ. எதற்காக மக்கள் நிதி பாதுகாப்பை நாடுகின்றனர். நிதி பற்றி போதிய அறிவு இல்லாமை. கடன் பொறியில் சிக்கிக்கொண்டுள்ளதால். இவர்களுக்கு வருமானம் அதிகமானால் செலவுகளும் அதிகமாகும் கடனும் அதிகமாக ஆகும். திரும்பவும் அதிக வருமானத்திற்காக அதிக நேரம் உழைப்பார்கள். இவர்களுக்கு வரியும் அதிகம். இவர்கள் இருவரும் தங்கள் நேரத்தை பணத்திற்காக விற்பனை செய்கின்றனர். அவர்கள் உழைக்கும் நேரத்தை நம்பியே அவர்கள் வருமானம் உள்ளது. அதனால் அவர்கள் வருமானம் பெருமளவு உயருவதில்லை. ஏனெனில் எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரங்களே உள்ளன. தனக்கென குடும்பத்துக்கென நேரம் ஒதுக்க முடிவதில்லை.
பெரிய தொழிலதிபர் ஒரு கட்டமைப்பை உருவாக்கி சிறந்த பணியாளர்களை அமர்த்தி தமக்காக உழைக்க வைக்கிறார். இவர் மற்றவர் நேரத்தையும் பணத்தையும் உழைக்க வைக்கிறார்கள். முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தையும் பிறர் பணத்தையும் தம்க்காக உழைக்க வைக்கிறார்கள். இவர்களுக்கு நதி பற்றிய அறிவும் ரிஸ்க்கை கையாள திறமையும் வேண்டும். இவர்கள் வருமானம் இவர்கள் உழைக்கும் நேரத்தை சார்ந்தது இல்லை. இவர்களுக்கு பெரும்பாலும் செயலற்ற வருமானமே. அதனால் நேரச்சுதந்திரம் உண்டு. இவர்களுக்கு பல வருமான வரி சலுகைகள் உண்டு. இவர்களுக்கு வியாபாரம் முதலீடு ரிஸ்க் பற்றிய நுண்ணறிவு தேவை. இவர்கள் அந்த கட்டமைப்பை எல்லையில்லாமல் விரிவுபடுத்தலாம்.
பணம் வாழ்க்கைக்கு கண்டிப்பாக தேவை. வாழ்க்கை முழுவதும் பணத்திற்காக உழைத்துவிட்டு பணம் முக்கியமில்லை எனக் கூறுவது முட்டள்தனம். உங்களுக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட 24 மணிநேரங்களே உள்ளன. உங்களால் சில மணிநேரங்களே உழைக்க முடியும். எதற்காக இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? பணமும் மற்றவர்களும் உங்களுக்காக உழைக்க வைக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை அதைவிட முக்கியமான விடயங்களுக்கு உபயோக படுத்துங்கள். கட்டங்கள் மாறுவது நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை மாற்றுவதை போன்றதாகும். அதற்கான தேவையானவற்றை எல்லாம் கற்றுக் கொள்ளுங்கள்.
செல்வம் என்றால் என்ன? நாம் இன்று முதல் வேலை செய்வதை நிறுத்திவிட்டால் எவ்வளவு காலங்களுக்கு அதே வாழ்க்கைத்தரத்துடன் வாழ முடியும் என்பதே. செல்வம் என்பது பணத்தால் அளவிடப்படுவது இல்லை. காலத்தினால் அளவிடப்படுவது. நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு பணம் உங்களுக்கு உழைப்பதற்காக வைத்துள்ளீர்கள். அந்த பணம் எவ்வளவு கடினமாக எவ்வளவு காலம் உங்களுக்காக உழைக்கிறது என்பதே முக்கியம்.
உங்கள் குறிக்கோள் ஒரு கட்டமைப்பை உருவாக்கி தகுந்த பணியாளர்கள் உங்களுக்கு உழைப்பதற்காக உருவாக்க வேண்டும். நிதி விடயங்களில் ரிஸ்க்கை கையாள கற்றுக் கொள்ளுங்கள். தவறு செய்யுங்கள். அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே இதைச் செய்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
பள்ளியில் நன்றாக படி. கல்லூரியில் நல்ல பட்டம் பெறு. நல்ல நிலையான வேலையைப் பெறு. இது இயந்திர கால கருத்து. வியாபாரத்தை கட்டுங்கள்; வியாபாரங்களில் முதலீடு செய்யுங்கள். இதுதான் இன்றைய நவின தகவல் தொழில்நுட்ப கால கருத்து.


கருத்துகள்
கருத்துரையிடுக