வளர்ச்சி மனநிலை
வளர்ச்சி நம் வாழ்வின் ஒரு முக்கியமான அம்சம். குழந்தைகள் வளரவில்லை என்றால் நாம் எவ்வளவு வருத்தப்படுகிறோம். குழந்தைகள் வளரவில்லை என்றால் ஏதோ ஒன்று சரி இல்லை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் பெரியவர்களாகிய நாம் வளரவில்லை என்றால் அதை ஏன் எளிதாக புறந்தள்ளுகின்றோம்? வளர்ச்சி என்றால் உடலளவிலும் மனதளவிலும் மட்டும் அல்ல. நமது வாழ்க்கை தரத்தில், நமது திறமைகளில், நமது வேலையில் எல்லாவற்றிலும் வளர்ச்சி மிகவும் முக்கியம். ஆனால் படித்து ஒரு வேலை கிடைத்ததும் நாம் வளர்ந்துவிட்டதாகவும் மேலும் வளர தேவையில்லை என நினைக்கின்றோம்.
நம் நண்பர்கள் உறவினர்கள் எத்தனை பேர் அதே வேலையை எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்கள் வருமானம் வளரவில்லை என்று தெரிந்தும் அதை தொடர்ந்து செய்து வருவதற்கான காரணம் என்ன? ஒரு வயதிற்கு பிறகு இருக்கும் வாழ்க்கையில் திருப்தி அடைந்து வளர மறந்துவிடுகிறோம். ஒருவேளை பள்ளியில் நடப்பதை போல் யாரும் நம்மை உந்துவதில்லை, கட்டளையிட்டு வேலை வாங்குவதில்லை என்பதால் இருக்கலாம். இல்லை அவசர வாழ்க்கைமுறை, பல கஷ்டங்கள், மற்றும் உந்துதல் இல்லாமையினால் இருக்கலாம். காரணம் எதுவானாலும் எதோ ஒன்று நம்மை வளரவிடாமல் தடுக்கிறது.
காலப்போக்கில் மாறுவதும் முன்னேறுவதும் வளர்ச்சி ஆகும். வளர்ச்சி என்பது ஒரு பொருளுக்குள் உள்ள இயக்கத்தைக் குறிக்கிறது. வளர்ச்சி இயற்கையானது. நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
அதேபோல் மனவளர்ச்சியும் மாற்றமும் நமது வாழ்விற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியம். மனவளர்ச்சி உங்கள் ஆற்றலையும் உங்களை சாதனையாளராகவும் உணர வைக்கிறது. உங்கள் அறிவை கூர்மையானதாகவும் வேலையில் மேலும் சிறந்தவராகவும் ஆக்குகிறது. நாம் வளரவில்லை என்றால் நாம் இறந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
மனம் ஒரு அழகிய விடயம். அதை சுறுசுறுப்பாக வைத்திருக்க அதற்கு புதுப்புது சவால்களுடன் பயிற்சி அளிக்க வேண்டும். மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் இருக்க நீங்கள் உங்களிடமிருந்தே தொடங்க வேண்டும். உங்கள் முழுத்திறனையும் வெளிக்கொணருவது கடினமாயினும் அதை அடைய முடியாது என்று யார் கூறினார்கள்?
தனிப்பட்ட வளர்ச்சி என்பது ஒரு பயணம். அது இலக்கு அல்ல. பெரியதாக கனவு காணுங்கள். உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை கட்டவிழ்த்து விடுங்கள். உங்கள் முழுபலத்துடன் செயல்படுங்கள். ஆக்கபூர்வமான வளர்ச்சியில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுங்கள். உங்கள் தனித்துவமான திறமைகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் கற்று கொண்டு உங்களையே விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
நாள் முழுவதும் நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால் எப்படி உணருவீர்கள்? எப்போதும் சுய முன்னேற்றப் பாதையில் இருங்கள். உங்களை நீங்கள் புரிந்து கொண்டு வளர்வதே சுய வளர்ச்சி ஆகும். நீங்கள் யார், உங்கள் பலம், பலவீனம், திறமை, ஆர்வம் என்ன என்பதை எவ்வளவு அதிகமாக புரிந்து கொள்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் வளர முடியும். மனிதனின் அளவற்ற ஆற்றலை பற்றி அறிந்து கொள்வதே வளர்ச்சியின் முதல்படி. பல செயல்களை செய்து முடிக்கும் வரை நீங்கள் அவற்றை செய்ய முடியும் என்று உணர மாட்டீர்கள்.
ஒரு தொழிலுக்கான தகுதியை மட்டும் இன்றி அதில் சிறந்து விளங்கவும் தொழில் முறை வளர்ச்சி முக்கியமானது. அந்த வளர்ச்சி வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். தொழில் முறை உலகம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் உங்கள் அறிவையும் திறமையும் மேன்படுத்தாமல் நின்றுவிட்டால் உங்கள் சகாக்களைவிட பின் தங்கிவிடுவீர்கள். தொழில்முறையில் திறன்களை வளர்ப்தற்கும் முன்னேறுவதற்கும் எப்போதும் இடம் உண்டு. ஒரு தொழிலில் தனிப்பட்ட அறிவைப்பெற்றால் அது அவர்களுக்கு அதிக நம்பிக்கையைத் தரும்.
வளர்ச்சி மனநிலை கொண்டவர்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் அதிக திறமைகளை வளர்த்து கொள்ளலாம் என்று நம்புகின்றனர். புத்திசாலித்தனமும் திறமையும் ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. வளர்ச்சி மனநிலை உள்ளவர்கள் எதையும் சாதிக்க முடியும். உங்கள் திறமையை தொடர்ந்து வளர்ப்பதும் உங்கள் புத்திசாலித்தனத்தையும் படைப்பாற்றலையும் வலுப்படுத்துவதே வளர்ச்சி மனநிலை. நீங்கள் செய்ய முடியும் என்று எண்ணுவதைத் தாண்டி செய்ய முயற்சி செய்வதே வளர்ச்சி மனநிலை ஆகும். முடிவை பொருட்படுத்தாமல் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை மதிப்பிட உதவுகிறது. சிக்கல்களை தீர்க்கவும் புதிய வாய்ப்புகளை கண்டறியவும் தொழில் சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது.
வளர்ச்சி மனநிலை தொடர்ந்து வளர்வது பற்றி என்றால் நிலையான மனநிலை அதற்கு எதிரானது. நிலையான மனநிலை கொண்டவர்கள் தங்கள் திறமை அறிவு ஆகியவை நிலையான பண்புகள் என்று எண்ணுபவர்கள். திறமை மட்டுமே வெற்றியை பெறும் என்று நினைப்பபவர்கள். அவர்களைப் பொறுத்தவரை ஒன்று திறமை உள்ளது இன்னொன்று திறமை இல்லை என்பது மட்டுமே. அத்தகைய மனநிலையில் வளர்ச்சி அடைய முடியாது. நம் திறமைகள் நம் கூடப்பிறந்தவை அவற்றை வளர்க்க முடியாது என்பது நிலையான மனநிலை. வளர்ச்சி மனநிலை என்பது கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் திறமைகளை வளர்க்கலாம் என்று எண்ணுவது.
வளர்ச்சி மனநிலையை வளர்ப்பது எப்படி?
தினம்தோறும் புதிதாக கற்று கொள்ளுங்கள். கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். வளர்ச்சி மனநிலை கொண்டவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பல்வேறு வாய்ப்புகளுக்கு மனதை திறந்து வையுங்கள். கற்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்ளுங்கள். வெற்றியை பார்க்கும் மனநிலையை மாற்றி கொள்ளுங்கள். சிறந்தவனாக இருப்பதே வெற்றி என்பதைவிட சிறப்பாக செயல்படுவதே வெற்றி என்பது எண்ணுங்கள். தோல்வியை உங்கள் இயலாமையாக கருதாமல் சிறிய பின்னடைவாக கருதி அதை ஆராய்ந்து உங்கள் செயலில் மாற்றம் கொண்டு வந்து வெற்றியை அடையுங்கள். எளிதில் திருப்தி அடையாதீர்கள். வளர்ச்சி மனநிலை உள்ளவர்கள் முடிவைவிட செயல்முறையை நேசிப்பார்கள்.
வளர்ச்சி மனநிலை உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு தாங்களே பொறுப்பெடுத்து கொள்வார்கள். பிடிக்காதவற்றை மாற்ற முயற்சிப்பார்கள். பிரச்சினைகளை கண்டு ஒட மாட்டார்கள். முடிவெடுப்பதில் பயம் குறுக்கிடுவதில்லை. கூரிய சிந்தனை திறன்மூலம் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கலாம்.
வளர்ச்சி தனிமனிதனுக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் உலகத்திற்கும் முக்கியம். வளர்ச்சி செயலில் ஆற்றலில் மட்டும் அல்ல பொருளாதாரத்திலும் மிகவும் முக்கியம். வளர்ந்து வரும் உலக பொருளாதாரத்தில் அதே இடத்தில் நிலையாக நிற்பது பின்னால் விழுவதற்கு சமம். வளர்ச்சி மட்டுமே எல்லாம் இல்லை. ஆனால் வளர்ச்சி இல்லாமல் எதுவுமே இல்லை. நாட்டிற்கு நல்ல அரசு, சமாதானம், நியாயம் ஆகியவை தேவை. அவை எல்லாம் நிகழ பொருளாதார வளர்ச்சி தேவை. மெதுவாக வளரும் நாட்டில் வெகுசில சரக்குகள் சேவைகளே உருவாகும். அதை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பிரித்தளிக்க இயலாது. பொருளாதார வளர்ச்சி நாட்டின் நலனுக்கான ஆதாரம் மட்டும் அல்ல. வளர்ச்சியே பொருளாதார மறுவிநியோகத்திற்கான மூலம் ஆகும்.
இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் படிப்பறிவற்றவர்கள் படிக்கவும் எழுதவும் முடியாதவர்கள் அல்ல. புதியதாக கற்கவோ கற்றவற்றை திருத்திக்கொள்ளவோ மேலும் புதியதாக கற்கவோ முடியாதவர்களே படிப்பறிவற்றவர்கள் - ஆல்வின் டோஃப்லர்.
"The illiterate of the 21st century will not be those who cannot read and write, but those who cannot learn, unlearn, and relearn." ~Alvin Toffler

கருத்துகள்
கருத்துரையிடுக