பங்குச்சந்தையில் என்னுடைய முதலீட்டு கொள்கை
பங்குச்சந்தையில் முதலீடு செய்வது அமெச்சூர் டென்னிஸ் விளையாட்டு போன்றது. இரண்டிலும் மிகவும் குறைவாக தவறு செய்பவர்களே வெற்றி பெறுவார்கள் என்கிறார் சார்லஸ் டி எல்லிஸ் எனும் பிரபல முதலீட்டாளர். அவர் முதலீட்டின் வெற்றியை வெற்றியாளரின் சிறந்த உத்தி மற்றும் செயல்பாடுகள் தீர்மானிப்பதில்லை. மாறாக முதலீட்டில் வெற்றியாளரின் திறமையை விட தோற்பவர்களின் தவறுகளே முடிவை தீர்மானிக்கின்றன என்கிறார். எனவே அவர் பங்கு முதலீட்டை தோற்பவர்களின் விளையாட்டு என்கிறார்; ஒருவரின் தவறுகளே மற்றவருக்கு வெற்றியை தருகிறது என்கிறார். குறிப்பாக என்னைப்போன்ற சாதாரண முதலீட்டாளருக்கு இது முற்றிலும் உண்மை. குறைந்த நேரம், தொழில்களைப் பற்றிய நுண்ணறிவு மற்றும் பகுத்தாய்வுத் திறன் இல்லாத சில்லரை முதலீட்டாளராக நாம் தொழில்முறை முதலீட்டாளர்களிடம் போட்டியிடுவது எளிதான காரியம் அல்ல. எல்லோரையும் போலவே நானும் பல தோல்விகளின் மூலம் எனக்கான பாதையை கடினமான வழியில் கற்றுக் கொண்டேன். அதில் கற்றுக்கொண்டவற்றை ஒரு முதலீட்டு கட்டமைப்பாக இங்கு பதிவு செய்கிறேன். இதை சாமானியனுக்கான பொது அறிவு முதலீட்டு தத்துவம் எனலாம். ஏனெனில் இதன் வெற்றிக்கு எந்த விரிவான தத்துவமும் செயல்முறையும் தேவையில்லை. பங்கு சந்தையில் வெற்றி பெற பல ஆயிரம் வழிகள் உள்ளன. அவற்றில் எது நம்முடைய இயல்பிற்கு உகந்தது என்பதை உணர்ந்து முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து சேமித்து மூலதனத்தை குவிக்க வேண்டும். இது முதலீட்டிற்கும் செல்வத்தை பெருக்குவதற்கான மூலப்பொருள் ஆகும்.
இப்பொழுது என்னுடைய முதல் குறிக்கோள் முதலீட்டில் மூலதனத்தை இழப்பதை தவிர்ப்பதே. போட்டியில் வெற்றி பெற முதலில் போட்டியை முடிக்க வேண்டும். செல்வத்தை கட்டியெழுப்பதற்கான மூலப்பொருள் மூலதனம் ஆகும். எனவே மூலதன இழப்பை தவிர்க்க வேண்டும். முதலீடு வெற்றி பெற்றால் எவ்வளவு லாபம் என்று யோசிப்பதற்கு முன்னர் முதலீடு தோல்வியடைந்தால் எவ்வளவு இழக்க நேரிடும் என்பதை சிந்திக்க வேண்டும். பணம் இழக்கும் அபாயத்தை சிந்தித்து தவிர்த்தால் முதலீட்டு லாபம் தானகவே கவனித்து கொள்ளும்.
பங்குகளை வாங்கி நெடுநாள் வைத்திருக்க வேண்டும். ஒருபோதும் விற்ககூடாது. ஒருநாளும் விற்க விரும்பாத நிறுவன பங்குகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். நீண்டநாள் வைத்திருக்க்கூடிய பங்குகளை மட்டுமே வாங்க வேண்டும். ஆகவே நம் பங்கு முதலீட்டில் விற்பனைகள் இருக்க கூடாது. அரிதாக புதிய பங்குகள் உள் நுழையலாம். ஆனால் முடிந்த அளவு வெளியேற்றங்கள் இருக்க கூடாது. அத்தகைய நீண்டநாட்கள் வைத்துக்கொள்ள கூடிய பங்குகளை மட்டுமே வாங்க வேண்டும். பங்குகளை வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்தால் நிறைய முதலீட்டு முடிவுகளை எடுக்க நேரிடும். அதிக முடிவுகள் தவறுகளை அதிகரிக்கும். அதற்குபதில் நல்ல நிறுவனப்பங்குகளை வாங்கினால் அவை நல்ல நிறுவனங்களாக இருக்கும் வரை விற்காமல் வைத்திருக்கலாம். அதனால் மறுமுதலீட்டு முடிவுகளை குறைக்கலாம். சில்லறை முதலீட்டாளர்கள் மறுமுதலீட்டு அபாயத்தை தவிர்ப்பதே நல்லது.
நாம் வாங்கும் பங்குகள் பின்வரும் பண்புகளை கொண்டிருக்க வேண்டும்.
1. நாம் புரிந்து கொள்ளக்கூடிய பங்குகளை மட்டுமே வாங்க வேண்டும். ஒரு சாதாரண மனிதன் தினமும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கக்கூடிய எளிய வணிகங்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
2. அவற்றில் மிகவும் நேர்மையான நம்பகத்தன்மையுள்ள மற்றும் சிறுபான்மை முதலீட்டாளர்களுக்கு சாதகமான நிர்வாகம் இருக்க வேண்டும்
3. நீண்ட ஆயுள் கொண்ட நிறுவனங்களாக இருக்க வேண்டும். நீண்ட வரலாறு மற்றும் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களாக இருக்க வேண்டும். இன்னும்20-30 ஆண்டுகள் நிறுவனம் இருக்குமா? அந்த நீண்ட வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளதா என அறிந்து கொள்ள வேண்டும்.
இவை மூன்றும் எந்த சூழ்நிலையிலும் தகர்க்ககூடாத இரும்பு விதிகள் ஆகும்.
10 ஆண்டு சராசரி ROCE/ROE > 15, 10 ஆண்டு விற்பனை/ லாப வளர்ச்சி >10, மற்றும் கடன் இல்லாத நிறுவனங்களை வாங்க வேண்டும்.
சைக்லிக்கல்ஸ், கமாடிட்டீஸ், ஐ.பி.ஓக்கள், அரசால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், புதுயுக டிஜிட்டல் நிறுவனங்கள், திருப்புமுனையில் உள்ள நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இத்தகைய நிறுவன பங்குகளில் வெற்றி பெற அவைப்பற்றிய ஆழ்ந்த அறிவும் பகுப்பாய்வு திறனும் சரியான விலையில் வாங்கி விற்கும் திறனும் வேண்டும்.
பங்குகளின் விலை ஏற்றயிறக்கங்கள் ஆபத்தை ஏற்படுத்தாது. அதை நாம் எதிர்கொள்ளும் விதமே நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நம் முதலீட்டில் சந்தேகம் இருந்தால் நிறுவனத்தின் அடிப்படையை மீண்டும் சரி பார்க்க வேண்டும். சந்தேகம் இருந்தால் விற்பதே நல்லது. மேலே உள்ள விதிகளை மீறும் நிறுவனங்களை எவ்வித யோசனையுமின்றி விற்றுவிட வேண்டும். நிறுவனத்தின் மதிப்பு மட்டுமே பிரச்சினை என்றால் விற்க வேண்டாம்.
ஒரு நிறுவனத்தின் நீண்டகால முதலாலியைப் போல் சிந்திக்க வேண்டும். முதலீட்டாளராக மட்டுமே அல்ல.
நீண்ட நாட்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். சந்தை வீழ்ச்சியின் போது பெரும்பாலும் வாங்கவும். எதிர்மறையான செய்திகள் வரும் நேரத்தில் வாங்க வேண்டும். பங்குகளை விட்டு விடுவோம் என்ற எண்ணம் வேண்டாம். நமக்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
15 முதல் 20 பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். வாங்கும் விலையில் சம எடையுள்ள போரட்ஃபோலியோவை உருவாக்க விரும்புகிறேன். பங்கின் மேல் உள்ள நம்பிக்கையைப் பொறுத்து இது மாறுபடலாம்.
ஒரு நிறுவன உரிமையாளரைப் போல சிந்திக்க வேண்டும். முதலீட்டாளராகவோ பங்குச்சந்தை நிபுணராகவோ அல்ல. பங்கு சந்தையில் வெற்றி பெற மந்திர சாவி எதுவும் இல்லை. பங்கு சந்தை விவாதங்கள் மற்றும் குழுக்களிலிருந்து விலகி இருங்கள். தனியாக சிந்தியுங்கள். நம் ஆர்வத்தை தணிப்பதற்காக படிக்கலாம். அடுத்த பெரிய முதலீட்டு கருப்பொருளை தேடுவதற்காக அல்ல.
பங்கு முதலீடு என்பது முடிவில்லாத தனிநபர் விளையாட்டு. பொறுமையுடன் இருக்க வேண்டும். யாருடனும் போட்டியிட வேண்டாம்.
விவேகமான முதலீட்டின் அடிப்படை கோட்பாடுகள் - மூலதன இழப்பை தவிர்க்க வேண்டும். உயர்தரமான பங்குகளை மட்டும் நமக்கு சாதகமான விலையில் வாங்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக